நாலு மிருகங்களுக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை -சித்தார்த்
2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசை மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது.
அழகிய சிங்க குட்டி சிம்பா ஒரு வீர மகனாக எழுந்து, பழிவாங்கி, அரியணையில் தன்னுடைய சரியான இடத்தை பிடித்தது தான், தலைமுறைகள் தாண்டியும் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது.
லைவ் அக் ஷன் பதிப்பை பெரிய திரையில் காண பார்வையாளர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் இடம்பெறும் கெரக்டர்களுக்கு சித்தார்த், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரவிசங்கர், ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோர் டப்பிங் கொடுத்திருக்கின்றனர். பட விழாவில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர்கள் சொன்ன பதிலும்!
கொமடியான நிறைய படங்களில் நடிச்சிருக்கீங்க, `த லயன் கிங்’ படத்துக்கு டப்பிங் பேசுன அனுபவம் பற்றிச் சொல்லுங்க? (சிங்கம் புலி)
“நேற்று வரைக்கும் சிங்கம் புலியா இருந்தேன். இந்தப் படத்தின் மூலமாக `த லயன் கிங்’ வீட்டில் ஒருஆளா மாறியிருக்கேன். முதல் முறையா இந்தப் படத்துக்கு டப்பிங் பேசுன அனுபவம் புதுசா இருந்தது. ரொம்ப சிரமப்பட்டு பண்ணினேன்னு சொல்ல முடியாது. ஆனா, சந்தோஷமாதான் வேலை பார்த்தேன்.
`ஸ்கார்’ வில்லன் கேரக்டருக்கு நீங்க டப்பிங் கொடுத்திருக்கீங்க. ஒரு நெகட்டிவ் மனப்பான்மையில் இருக்கிறவங்க எப்படி இதுல இருந்து வெளியே வரணும்னு நினைக்குறீங்க? (அரவிந்த்சாமி)
` `ஸ்கார்’ கெரக்டருக்குக் கண்டிப்பா நெகட்டிவ் குணங்கள் இருக்கும். ஏன்னா, படத்துல ஸ்கார் வில்லன் ரக்டர் பண்ணியிருக்கார். ஆனா, நிஜ வாழ்க்கையில் கெட்ட குணங்கள் வரும்போது, அதை அப்படியே தட்டி உட்கார வெச்சிடணும்.
` `சிம்பா’ கெரக்டருக்கு நீங்கதான் டப்பிங் கொடுக்கப்போறீங்கனு தெரிஞ்சதும் உங்க ரியாக்ஷன் என்னவா இருந்தது? (சித்தார்த்)
`த லயன் கிங்’ படம் சின்ன வயசுப் பசங்களையும் தாண்டி எல்லா வயசுல இருக்கிறவங்களுக்கும் ரொம்பப் பிடிச்ச படம். இந்தப் படம் ரொம்ப சிம்பிளான கதை.
மிகப்பெரிய வெற்றியடைந்த படங்களுக்கான சீக்ரெட் இதுவாகத்தான் இருக்கும். `சிம்பா’ கெரக்டருக்கான டப்பிங் வாய்ப்பு என்னைத் தேடி வந்தப்போ, சந்தோஷமா இருந்தது. ஏன்னா, என் முகத்தையே பார்த்துப் பார்த்து டப்பிங் பேசி 17 வருடம் ஆகிருச்சு. இன்னும் பெட்டரா நல்லா நடிக்கிற முகத்தைப் பார்த்து டப்பிங் பேசுனா நல்லாயிருக்கும்னு தோணுச்சு.
என்னைவிட ரொம்பச் சிறப்பா நடிச்சிருக்கு இந்தச் சிங்கம். பார்க்கிறதுக்கும் ரொம்ப அழகாக, கம்பீரமா இருக்கு. அதுக்குக் குரல் கொடுக்குறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்தப் படத்துக்கு டப்பிங் கொடுத்ததை ரொம்ப பாசிட்டிவா பார்க்கிறேன்.
எங்களையும் தேடி நிறைய நல்ல படங்களுக்கு டப்பிங் பேச வாய்ப்புகள் வரும். அதுமட்டுமல்லாம, எனக்கும் ஸ்கார் கெரக்டருக்கு டப்பிங் பேசணும்னு ஆசையிருக்கு. 25 வருடத்துக்குப் பிறகு அரவிந்த் சாமி சார் மாதிரியே நானும் வில்லனுக்கு டப்பிங் பேசுவேன்னு நம்புறேன்.
உங்ககிட்ட இருக்கிற மிருகத்தோட கெரக்டர் எது? (ரோபோ சங்கர்)
முதல் முறையா அனிமல் கெரக்டருக்கு டப்பிங் கொடுத்திருக்கேன். நாம நடிக்கிற கெரக்டருக்கு டப்பிங் பேசும்போது நம்மளோட மைண்ட் வாய்ஸை அங்கே அங்கே அப்படியே தெளிச்சிவிடுவோம். ஆனா, இந்தப் படத்தைப் பொறுத்தவரை அப்படி எதுவும் பண்ண முடியாது.
படத்துல வர்ற கெரக்டர் என்ன பண்ணுது… மூக்கை உறிஞ்சுதா, முறைக்குதா, கொட்டாவி விடுதான்னு பார்த்து பர்ஃபெக்ட்டா பேசணும். எனக்கொரு வித்தியாசமான அனுபவத்தை இந்தப் படம் கொடுத்தது. ரொம்ப வெகுளியா என்னை மாதிரியே இருக்கிற ஒரு மிருகத்துக்கு படத்துல டப்பிங் குரல் கொடுத்திருக்கேன்.
25 வருடத்துக்கு முன்னாடி ஹீரோ சிம்பா கெரக்டருக்கு டப்பிங் கொடுத்திருப்பீங்க. இப்போ, வில்லன் ஸ்காருக்கு டப்பிங் கொடுத்திருக்கீங்க. இந்த அனுபவம் பற்றி? (அரவிந்த் சாமி)
25 வருடத்துக்கு முன்னாடி `சிம்பா’ கெரக்டருக்கு டப்பிங் கொடுக்கும்போது என் மைண்ட்ல எந்த விஷயமும் இல்லை. ஒரு அனுபவமா எடுத்துக்கிட்டுதான் பண்ணினேன்.
இந்த முறை ஸ்கார் கெரக்டருக்கு டப்பிங் பேசும்போது, கதையை சுவாரஸ்யமா மாத்துறதே இந்த கெரக்டர்தான். அதனால, நம்மளோட மாடுலேஷன்ல எப்படிப் பேசலாம், வெளிப்படுத்தலாம்னு தோணுச்சு. என்னோட ஃபேவரைட் ஸ்கார்தான்.
`த லயன் கிங்’ கதையை நம்ம ஊரில் பண்ணுனா யார் எடுத்தா நல்லாயிருக்கும்னு நினைக்குறீங்க? (சித்தார்த்)
பல ஆயிரம் கோடி செலவு செய்து தொழில்நுட்பத்தோட உச்சத்தைத் தொட்டு ஒருபடத்தை நம்ம ஊர்ல எடுக்கும்போது அந்த வாய்ப்பு என்னைத் தேடி வராது. இந்த ஒப்பீட்டைக்கூட விட்டுடலாம். ஏன்னா, இன்னும் 25 வருடத்துக்குப் பிறகு இந்த மாதிரியான படம் நம்ம ஊர்ல வரலாம்.
தொழில்நுட்பக் கலையில் அவங்க அந்தளவுக்கு முன்னேறியிருக்காங்க.
இந்தப் படத்துல நடிகர்களுக்குக் கொடுத்த சம்பளத்தைவிட, தொழில்நுட்பத்துக்குப் போட்ட பணம்தான் அதிகம்.
நம்ம ஊர்ல யார் எடுத்தாலும் என்னையும், அரவிந்த் சாமியும், ரோபோ சங்கர், சிங்கம் புலி அண்ணாவையும் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தா நல்லாயிருக்கும்.
தமிழில் விலங்குகளை வைத்து படமே எடுக்க முடியல. ஒரு பூனையைத் திரையில் காட்டக்கூட கிராஃபிக்ஸை நம்பவேண்டிய நிலை இருக்கு. இதை எப்படிப் பார்க்குறீங்க? (சித்தார்த்)
“நான் ஒரு அனிமல் லவ்வர். மிருகங்களுடையை நலனுக்காக நிறைய பேசியிருக்கேன். ஒரு காலகட்டத்துல மிருகங்களை வைத்துப் படம் எடுத்திருக்காங்க.
அப்போ எடுக்கப்பட்ட சூழல் எப்படியிருந்ததுனு எல்லோருக்கும் தெரியும். ஆனா, இப்போ மிருகங்களை யாரும் தப்பா பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறைகள் வந்திருக்கு. தவிர, இப்போதான் கிராஃபிக்ஸ் வந்துடுச்சே… அதைப் பயன்படுத்துறதுல என்ன தப்பு. காலத்தோடு நாமும் மாறிக்கிட்டே இருக்கலாம். இதனால இன்னும் நாலு மிருகங்கள் சந்தோஷமா இருந்தா, எதுவும் தப்பில்லை.